Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2024ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு

நவம்பர் 30, 2023 12:48

நாமக்கல்: நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2024ம் ஆண்டுக்கான வடைமாலை அலங்காரம், அபிசேகம் முன்பதிவு டிச.,3ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஒரே கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கோயிலில் நாள்தோறும் காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெறு வழக்கம்.

தொடர்ந்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிசேகமும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும். இதற்காக கட்டளைதாரர்கள் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்துகொள்வது வழக்கம்.

ஒரு நாள் அபிசேகத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், மலர் அங்கி, முத்தங்கி, மாலையில் தங்கத்தேர், சந்தனக்காப்பு, வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திற்கு தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

வரும் 2024ம் ஆண்டு வடைமலை அலங்காரம் மற்றும் அபிசேகத்திற்கான முன்பதிவு டிச.,3ம் தேதி தொடங்க உள்ளது.

சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோயில் நிர்வாக அலுவலகத்தில் முழுத்தொகையையும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுபோல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசம் ரூ.750, முத்தங்கி அலங்காரத்திற்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் செயல் அலுவலரும், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்